×

மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் டிஆர் பாலு கோரிக்கை

புதுடெல்லி: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று திமுக எம்பி டிஆர் பாலு கோரிக்கை விடுத்தார். மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னையை நேற்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டிஆர் பாலு எழுப்பி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,’ மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 47 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை தேசியப் பேரிடராக அறிவிப்பதுதான் முறை. உள்துறை அமைச்சகம் அதைச் செய்திருக்கும் என்று நினைத்தேன். அனைத்து பகுதிகளிலும் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.

அனைத்து பகுதிகளிலும் மக்கள் உணவு மற்றும் நிவாரணபொருட்கள் படகுகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்திய அரசு விரைவாக முன் வந்து நிலைமையை மதிப்பிடுவதற்கு குழுக்களை அனுப்ப வேண்டும். எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் விரைவான நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சூழலில் இந்திய அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும்’ என்று பேசினார்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் டிஆர் பாலு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Migjam cyclone ,TR ,Parliament ,New Delhi ,DMK ,TR Balu ,Migjam storm ,Tamil Nadu ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...